Friday, March 30, 2007

பூனைக்கு-2

III

இந்திய சமூகத்தில் நடைபெற்ற ஒரேயொரு இடஒதுக்கீடு வர்ணாசிரமக் கோட்பாடு தான். தொழில் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் உயர்வு தாழ்வு, தீட்டு புனிதம் என்ற பாகுபாடு அற்றிருந்த இந்திய சமூகத்தை இந்த வர்ணாசிரமக் கோட்பாடுதான் இணக்கம் காண முடியாத வர்ணங்களாக பிரித்தது. வர்ணங்களை கிடைமட்டமாக சமதளத்தில் வைக்காமல் ஒன்றின் கீழ் ஒன்றான படிவரிசையில் தாழ்த்தியது. ஆகச்சிறந்த அனைத்தையும் பார்ப்பனர்களுக்கே - அதாவது பார்ப்பன ஆண்களுக்கே - என்று ஒதுக்கீடு செய்தது. எடுத்தயெடுப்பில் அது இங்கேயே எல்லா வர்ணத்துப் பெண்களையும் புனிதமற்றவர்கள் என்று கீழ்மைப்படுத்தி எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்ததன் மூலம் போட்டியாளர்களில் ஒரு பெரும்பகுதியை ஒழித்துக் கட்டியது. பிறகு அது ஆண் போட்டியாளர் பக்கம் திரும்பியது. பார்ப்பனர்களைத் தவிர்த்த அனைவரையும் பார்ப்பனர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யுமாறு பணித்தது. இந்த நியதி மீறப்படாமல் இருப்பதற்கான சட்டங்களை இயற்றியது. எதிர்ப்புகளையும் மீறல்களையும் ஒடுக்கும் கடும் தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன.

பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் முற்றுரிமைகளையும் கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை சமூகத்தில் தகவமைக்கும் நுட்பங்களோடு புராணங்கள் இதிகாசங்கள் காவியங்கள் நாடகங்கள் உள்ளிட்ட கலை இலக்கியப் படைப்புகள் வெளியாகின. இதன் மூலம் இயற்கை வளங்களான நிலம் நீர் காற்று, பொதுச்சொத்துக்களான கல்விச்சாலைகள், பண்டகசாலைகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றில் பார்ப்பனர்களுக்கே முதலுரிமை வழங்கப்பட்டது. அரசனின் பட்டத்து மகிஷியை கன்னி கழிக்கும் உரிமைகூட பார்ப்பனர்களுக்கிருந்தது. ஒரு பார்ப்பனர் யாரைத் தொடுகிறாரோ அல்லது தொட மறுக்கிறாரோ அதைப் பொறுத்து ஒருவர் தீண்டத்தக்கவரா தீண்டத்தகாதவரா என்பது முடிவானது. எண்ணையும் தண்ணியும் யாரிடமிருந்து ஒரு பார்ப்பனர் பெற்றுக் கொள்கிறாரோ அதுவே ஒருவரின் சமூக அந்தஸ்தை தீர்மானிப்பதாயிருந்தது.

வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டு முறைகளான யாகங்கள், பரிகாரங்கள், மந்திரங்கள், சடங்குகள் நடைமுறைக்கு வந்தன. பார்ப்பனரல்லாதாரின் பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இழிவுக்குரியதாய் அறிவிக்கப்பட்டன. அவர்களது உணவு, உடை, இருப்பிடம், நம்பிக்கைகள், தெய்வங்கள், பண்டிகைகள் எல்லாவற்றின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரம் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது. ஓட்டுவீடு கட்டிக்கொள்வது, குடை எடுத்துச் செல்வது, செருப்பணிவது, சவரம் செய்து கொள்வது, புத்தாடை அணிவது, இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கு கீழும் உடை அணிவது, நெய் உண்பது, தார்ப்பாய்ச்சி வேட்டி கட்டுவது, பொன்னாலான நகை அணிவது, தேர்/குதிரைசவாரி ஆகிய அனைத்தும் சூத்திரசாதியாருக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டது. சொத்து வைத்துக் கொள்ளும் உரிமையும் இவர்களுக்கு முற்றாக மறுக்கப்பட்டது. சூத்திரசாதியார் சமூகரீதியாகவும் பொருளாதாரரீயாகவும் பின்தங்கியதற்கான காரணம் இங்கே தொடங்குகிறது. இவர்களது மொழி இழிசனர் மொழியாக அறிவிக்கப்பட்டதால் இவர்களது கலை இலக்கிய வெளிப்பாடுகளும்கூட இழிசனர் வழக்காக ஒதுக்கப்பட்டன. இந்தத் துவேஷம் இன்றுவரை நீடிப்பதன் சான்றுதான் சிதம்பரம் கோயில் விவகாரம்.

வேதங்களை படிப்பது பயிற்றுவிப்பது என்பதே அன்றைய கல்வியாக இருந்த நிலையில் இந்த வேதகல்வி என்பது எட்டாண்டு காலம் நாளொன்றுக்கு சராசரியாக பன்னிரண்டே வரிகளை படிப்பது தான். ஆனால் இதை படிக்கும் திறமை சமூகத்தின் பெரும்பகுதியினராகிய பெண்களுக்கும் உழைக்கும் மக்களாகிய சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கிடையாதென்று மறுத்துவிட்டு பார்ப்பன ஆண்கள் மட்டுமே கற்றனர். தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதஸ்லோகங்களை பெண்களும் பார்ப்பனரல்லாத மற்றவர்களும் ஓதினாலோ ஓதுவித்தாலோ அது தீட்டுக்குரியதாகிவிடும் என்று விளக்கம் தரப்பட்டது. அதை மீறி வேதம் பயில முயன்ற சம்புகனை ராமனே தேரேறிப் போய் கொலை செய்த கதை நாடறிந்த ஒன்றுதான். (இப்பேர்ப்பட்ட ராமனின் ராஜ்ஜியத்தைத்தான் இங்கே நிறுவப்போவதாய் சங்பரிவாரம் கூறுகிறது). வேதமந்திரங்களை உச்சரித்ததற்காக நாக்கை வெட்டிவிடும் தண்டனை மராட்டியத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரை இருந்தது. புராணகாலத்தில் மட்டுமல்ல, தீட்டுக்குரியவர்களாகிய பொற்கொல்லர்கள் நமஸ்காரம் என்ற சமஸ்கிருத வார்த்தையை உச்சரித்து தீட்டுப்படுத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று சித்பவன பார்ப்பனர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின்பேரில் அப்படியொரு தடை உத்தரவு 09.08.1779 அன்று வெளியிடப்பட்டது. (அம்பேத்கர் தொகுப்புநூல் 25, பக்கம் 78,79). மகாத்மா ஜோதிராவ் பூலேவும் அவரது துணைவியாரும் நடத்திய பெண்களுக்கான பள்ளி எரிக்கப்பட்டது.

வேதத்தை ஏற்காதவர்களும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தவர்களும் வர்ணப்பிரிவினைக்கு வெளியே அவர்ணர்களாக பஞ்சமர்களாக ஒதுக்கப்பட்டனர். உயர்வர்ணத்து ஆணும் கீழ்வர்ணத்து பெண்ணும் கலந்து அனுலோம சாதியும் உயர்வர்ணத்து பெண்ணும் கீழ்வர்ணத்து ஆணும் கூடி பிரதிலோம சாதியும் உருவானதாகக் கூறி இதில் பிரதிலோம சாதியை தீண்டத்தகாததாக அறிவித்து ஒதுக்கினர். இவர்கள் அனைவரும் சூத்திரர்களைவிடவும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இவர்களைக் கண்டாலும் இவர்கள் பேசுவதைக் கேட்டாலும் தீட்டு என்று அறிவிக்கப்பட்டது. சமூகத்தின் எந்த நடவடிக்கையிலும் இவர்கள் பங்கேற்பு தடை செய்யப்பட்டது. இவர்களுக்கு ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் தொடங்குவதை 1850லும் கூட பார்ப்பனர்கள் எதிர்த்ததாக பம்பாய் மாகாண கல்விக்கழக அறிக்கை தெரிவிக்கிறது. சூத்திரர்களும் பெண்களும் பஞ்சமர்களும் கல்வியில் முற்றாக விலக்கி வைக்கப்பட்ட வரலாறு இதுதான்.

ஆட்சி நீடிக்கவும் ராஜ்ஜியம் விரிந்து பரவவும் ஆயுள் நீட்டிப்புக்கும் எதிரிகளை ஒழிக்கவும் இன்னின்ன யாகங்களை செய்தாக வேண்டும் என்று அரசனை நிர்ப்பந்தித்தனர் பார்ப்பனர்கள். அந்த யாகங்களுக்காக பிரம்மதேயம், ஆர்யவர்த்தம், சதுர்வேதி மங்கலம், வேள்விக்குடி, அக்ரஹாரம் போன்ற பெயர்களில் மானியமாக பெருமளவு நிலங்களையும் கால்நடைகளையும், ஹிரண்ய கர்பா, துலாபுருஷதானம் போன்றவை வழியாக பொன்னும் இதர பொருட்களையும் பெற்று சொத்துடைமையுள்ள குழுவாக பார்ப்பனர்கள் மாறினர். உடல் உழைப்பை பாவகரமானதாக ஏற்கனவே அறிவித்துவிட்ட பார்ப்பனர்கள் இப்போது தானமாகப் பெறுகிற நிலங்களில் வேளாண்மை செய்வதை சாஸ்திரம் தடுத்தது. எனவே பார்ப்பனரின் நிலங்களில் பாடுபட்டு விளைவித்துத் தரும் பொறுப்பு சூத்திர சாதிகளுக்குரிய கடமையாக அறிவிக்கப்பட்டது. அதாவது இவர்கள் நிலத்தை விட்டு உடல் உழைப்பை விட்டு வேறுபக்கம் நகர்ந்துவிட முடியாதபடி வலுவாக பிணைக்கப்பட்டனர். பெரும்பாலான சூத்திரசாதிகளின் வாழ்வாதாரமாக விவசாயம் சார்ந்த தொழில்களே இருப்பதற்கு இதுவே காரணம்.

ஆக, சமூக மக்கள் தொகையில் சரிபாதியாய் இருக்கும் பெண்கள், உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள், தீண்டத்தகாத சாதியினர், பழங்குடிகள் ஆகியோர் சொத்தில்லாதவர்களாக, கல்வியற்றவர்களாக இப்படித்தான் மாற்றப்பட்டனர். (பின்பு இதையே காரணம் காட்டி வெள்ளையராட்சியின்போது வாக்குரிமையும்கூட மறுக்கப்பட்டது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அம்பேத்கர் முழங்கியது இதன் பொருட்டே) போட்டியாளர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டு தன்னந்தனியாய் களத்தில் நின்றனர் இம்மாவீரர்கள். இந்த உயர்ந்த நிலையை அடைய அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் சத்திரியர்கள். அரசாள்வதும் போர்புரிவதுமாகிய தொழில்களில் ஈடுபட்டு வந்த இந்த சத்திரியர்களை தமக்கு அடுத்த நிலையிலுள்ள உயர்வர்ணமாக அறிவித்ததன் மூலம் அரசனும்கூட தமது சேவகன்தான் என்ற நிலையை பார்ப்பனர்கள் உருவாக்கினர். சத்திரியர்கள் வேதம் படிக்கலாம் ஆனால் ஓதக்கூடாது. இப்படி பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக வேதம் படித்த இந்த சத்திரிய சாதியினர்தான், இப்போது இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் பார்ப்பனர்களோடு இணைந்து நிற்கிற பிற உயர்சாதி மாணவர்கள்.

சில வேத ஸ்லோகங்கள், யாக சடங்குகள், பரிகாரப் பூஜைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது மட்டும்தான் வெள்ளையராட்சி வரும் வரை பார்ப்பனர்களிடமிருந்த அறிவு. இந்த அறிவு மனிதகுலத்திற்கு எவ்வகையிலும் பயன்படாத அறிவு. இந்த அறிவைப் பயன்படுத்தி உப்பு, புளி, மிளகாய், ஒருமுழக் கோவணத்துணி, ஒரு சட்டி, ஒரு துளி தண்ணீர், ஒரு விறகுக்குச்சி, ஒரு கவளம் சோறு, ஒரு சவரக் கத்தி, ஒரு கலப்பை என்று எதையும் பெறமுடியாது. கால்நடைகளை வெறுமனே யாகத்தில் பொசுக்கித் தின்னும் இறைச்சியாக பார்த்தது பார்ப்பனரின் அறிவென்றால், கால்நடைகளை செல்வமாகக் கருதி வளர்க்கவும் விருத்தி செய்யவும் பால் பொருட்களைப் பெறவும் பயன்பட்டது பார்ப்பனர் அல்லாத உழைப்பாளி மக்களிடமிருந்த அறிவுதான்.

நிலத்தில் இறங்கி உழுபடை வேலைகள் செய்வதை தீட்டாகக் கருதி பார்ப்பன அறிவு ஒதுங்கி நின்றபோது (ஒருவேளை ஏர் ஓட்டும் ஆசை வந்தால் கலப்பை பொம்மை செய்து விளையாடி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது சாஸ்திரம்) கால்நடைகளைப் பழக்கி விவசாயம் செய்யவும் புதிய தானியங்களையும் காய்கனி கிழங்குகளையும் உணவாகக் கண்டு கொடுத்த பெருமை எளியவர்களின் அறிவுக்குரியது. ஆடியில் நற்காரியங்கள் எதையும் செய்யக்கூடாது என்று பார்ப்பன அறிவு மிரட்டிக் கொண்டிருந்தபோது ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பயிர்த் தொழில்களுக்கு ஏற்ற பருவங்களை கணிக்கும் அறிவு பார்ப்பனரல்லாதாருக்கு இருந்தது. விலங்குகளின் தோல்களை பதப்படுத்தி ஆடைகளையும் காலணிகளையும் கண்டுபிடித்ததும் இவர்களது அறிவுதான். இவர்கள்தான் இன்றைக்கு பார்ப்பனர்கள் பெரிதும் விரும்பிப் படிக்கும் Genetic Engineering, Tissue culture, Astronomy, Leather Technology போன்ற படிப்புகளுக்கு முன்னோடிகள்.

கடல்தாண்டுவது பாவம் சாஸ்திர விரோதம் என்று தடுத்தது பார்ப்பனர்களின் அறிவென்றால், கடலுள் மூழ்கி முத்தெடுக்கவும், மீன் பிடிக்கவும், கடல் மேல் பயணம்போய் வாணிகம் செய்யவும், கடல்நீரை உப்பாக மாற்றவும் பயன்பட்டது பார்ப்பனரல்லாத உழைப்பாளி மக்களின் அறிவு. இன்றைக்குள்ள Marine Technologyன் மூலவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள். பருத்தியை பஞ்சாக்கி பஞ்சை நூலாக்கி நூலை துணியாக்கும் தொழில்நுட்பச் சங்கிலியில் பார்ப்பனர்களின் கண்டுபிடிப்பு எது? பட்டுத்துணி உடுத்திக் கொண்டால் எந்தத் தீட்டும் அண்டாது என்று சொல்லத் தெரிந்த பார்ப்பன அறிவுக்கு ஒரு அங்குல நூல் நூற்கத் தெரியாது. சுட்டச் செங்கல்லை அறிந்ததும், சுதையை தயாரித்ததும் எவருடைய அறிவு?

ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி நிற்கும் கோட்டை கொத்தளங்களையும் கோவில்களையும் அணைகளையும் கட்டிய அறிவு எந்த பார்ப்பனரின் கொடையுமல்ல. பனையை தீட்டுக்குரிய மரமாக பார்ப்பனர்கள் ஒதுக்கிவைத்த போது (இன்றும் கூட அவர்கள் பனங்கிழங்கு சாப்பிடுவதில்லை என்கிறார் முனைவர் தொ.பரமசிவன்) பனையோலையை பதப்படுத்தி எழுத்தோலையாக மாற்றிக்கொடுத்த அறிவு ஒரு பனையேறிக்குரியது. கையெல்லாம் காப்பேற உளிபிடித்துச் செதுக்கி காலத்தின் வரலாற்றைச் சொல்லும் கல்வெட்டுக்களை தந்தவர்கள் இன்றைய ஒட்டர்களுக்கும் போயர்களுக்கும் முன்னோடிகளாக இருக்கக்கூடும். காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் கவினுறு வனப்போடு திகழும் சிலைகள், சிற்பங்கள் எதன்மீதும் ஒரு பார்ப்பனனின் ரேகையுமில்லை.

சகமனிதனைத் தொடுவதே பாவம் என்று பார்ப்பனர்கள் தீட்டு பாராட்டிக் கொண்டிருந்தபோது பிணி முறிக்கும் வைத்திய முறைகளை மூலிகைகளைக் கண்டறிந்தவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள் தான். பார்ப்பனர்களின் வைதீக மரபுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சித்தர்கள் கண்டடைந்த வைத்தியமுறை இன்றைய நவீனகால நோய்களுக்கும்கூட சிகிச்சையளிக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. குடிமைத் தொழிலாளிகளான நாவிதர்கள்தான் இந்திய கிராமங்களின் மருத்துவர்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் மகப்பேறு வைத்தியர்கள். AIIMSல் படித்த எந்த மருத்துவரும் கிராமத்திற்குச் செல்லாத நிலையில், அனுபவ வைத்தியர்களின் அறிவுதான் காலகாலமாக இந்திய சமூகத்தின் நோய்களைப் போக்கி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கல்வியின் முன்னோடிகள் இவர்கள்தான். தம்முடைய அலோபதியே சிறந்தது என்று நிறுவிட மண்சார்ந்த மருத்துவமுறைகளை பின்தள்ளினர் வெள்ளையர். சேவை என்ற நிலையிலிருந்து ஒரு தொழிலாக மருத்துவம் மாறியபோது பார்ப்பனர்கள் மருத்துவத் துறைக்குள் நுழைந்தனர்.

காட்டுவிலங்குகளை வேட்டையாடித் தின்ன அரசர்களுக்கு நேரம் கணித்துக் கொடுப்பதற்கும், வாழ்வின் அந்திமத்தில் வானப்பிரஸ்த கட்டத்திலும், சந்நியாச கட்டத்திலும் மட்டுமே ஒருவன் காட்டுக்குப் போகவேண்டுமென்று ஆசிரம விதிகளை வலியுறுத்திக்கொண்டும் இருந்தது பார்ப்பன அறிவு. ஆனால் காட்டின் மக்களாகிய பழங்குடிகள், அங்கிருக்கும் அரிய மூலிகைகளையும் வாசனைத் திரவியங்களையும் தேனையும் உண்ணத்தக்க கனிகளையும் கிழங்குகளையும் கண்டறிந்து சமவெளியின் மக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இயற்கையை வெற்றி கொள்வது என்கிற அழிவுச் சித்தாந்தத்திற்கு எதிராக இயற்கையோடு இயைந்து வாழும் நெறியை மனிதகுலத்துக்கு கற்றுக் கொடுத்தவர்கள் பழங்குடியினர்.

கலை இலக்கியத்திற்கு வந்தாலும் இரண்டு இதிகாசங்களை படைத்தவர்களும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவரும் பார்ப்பனரல்லாதவர்கள்தான். செய்யும் தொழில் சார்ந்த கருவிகள், உற்பத்தி, வினியோகம், வாணிபம் சார்ந்த சொற்களை உருவாக்கி மொழியை வளப்படுத்தியவர்களும் இவர்கள்தான். உழைப்பின் வழி பெற்ற அனுபவங்களை, இயற்கையின் மேன்மைகளை, வாழ்தலின் பாடுகளை தலைமுறைகளுக்கு மாற்றிக் கொடுக்கும் வகையிலான பாடல்களையும் கதைகளையும் நாடகங்களையும் பல்வேறு கலை வடிவங்களையும் உருவாக்கியவர்களும் இவர்களே. வேதத்தில் இல்லாதது எதுவுமேயில்லை என்று பார்ப்பன அறிவு தேக்கமுற்றுக் கிடக்கையில் பிறப்பின் தாலாட்டு தொடங்கி இறப்பின் ஒப்பாரிவரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்குமான பாடல்களும் ஆடல்களும் வீரவிளையாட்டுகளும் பார்ப்பனரல்லாதாரின் பெருமைமிக்கக் கொடையாக இன்றும் உள்ளன. தேவபாஷை என்று விதந்தோதப்பட்ட பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் செத்த மொழியாகவும் பார்ப்பனரல்லாதோரின் மொழிகள் தழைத்து வளர்கின்றவையாகவும் உள்ளன. சமஸ்கிருதம் முதலில் மக்களை ஒதுக்கியது. பின் மக்கள் அதை ஒதுக்கிவிட்டனர். வளர்வதற்கான வீர்யமற்ற அந்த மொழியால் பார்ப்பனர்களின் உண்டியல்களுக்கு தட்சணைகளைத்தான் இன்றும்கூட பெற்றுத்தர முடிகிறதே தவிர இந்திய சமூகத்திற்கு இதுவரை ஆக்கப்பூர்வமாக எதை வழங்கியிருக்கிறது?

மண்ணில் புரண்டு வாழ்கிறவனுக்குத்தான் அந்த மண்ணில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியும். விண்ணையே வெறித்துக் கிடப்பவனுக்கு தெரிவது நட்சத்திரமாகவோ சூரியனாகவோ நிலவாகவோ இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு சகமனிதனுக்கு என்ன பெற்றுத்தர முடியும்? எனவே பகுத்துப் பகுத்துப் பார்த்தால் பார்ப்பனர்களின் அறிவு சமூகத்திற்கு துளியும் பயன்படாத- இல்லாத கடவுளுக்கு பயன்படும் அறிவாகவும், பார்ப்பனரல்லாதவர்களின் அறிவு மனிதனின் வாழ்க்கைத் தேவைகளை உற்பத்தி செய்யக்கூடிய - வாழ்நிலையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு மேலேற்றிக் கொண்டு செல்லக்கூடிய அறிவாகவும் இருக்கிறது. ஆகவே வெள்ளையராட்சி வரும் வரை பார்ப்பனர்களுக்கிருந்த பரம்பரை அறிவு விஞ்ஞானப்பூர்வமானதோ மருத்துவம் சார்ந்ததோ உற்பத்தி சார்ந்ததோ அல்ல. அது வெறுமனே கோவிலில் மணியாட்டவும் மந்திரம் ஓதவுமான அறிவாக மட்டுமே முடங்கியிருந்தது. பார்ப்பனர்களுக்கு அடுத்திருந்த சத்திரிய சாதியினரின் அறிவும் ராஜ்ஜியங்களை காப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான போர்த்தொழில் அறிவாக- அழிவுக்கான அறிவாக- மனிதகுலத்திற்கு எதிரான அறிவாகத்தான் இருந்தது.

IV

சாம்ராஜ்யங்கள் வெள்ளையரால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசர்கள் இல்லாத பகுதிகளை விட்டு பார்ப்பனர் வெளியேறினர். நகரங்களை மையமிட்டு வளர்ந்த பிரிட்டிஷ் அதிகாரத்தில் ஒட்டிக் கொள்வதற்காக கிராமங்களை விட்டும் வெளியேறினர். கிராமங்களில் தமக்கிருந்த மானிய நிலங்களை பராமரிக்கும் பொறுப்பு அவர்களுக்கு அடுத்தடுத்த கீழ்நிலையிலிருந்த சாதியினரிடம் ஒப்படைத்தனர். தாங்கள் இதுவரை காத்துவந்த சாதி ஒழுங்குமுறை என்கிற ஒடுக்குமுறையும்கூட கைமாற்றித் தரப்பட்டது. பார்ப்பனர்களுக்குப் பதிலாக சாதியைக் காப்பாற்றும் பொறுப்புக்கு புதிய தலைமைகள் வந்தன. பார்ப்பனர்கள் இல்லாத நிலையிலும் இன்றளவும் கிராமப்புறங்களில் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளுக்கான உளவியல் பலம் பார்ப்பனர்களிடமிருந்தே பெறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதே காலகட்டத்தில் உபரி உற்பத்தியை விற்பனை செய்வதில் ஈடுபட்ட வைசிய சாதிகள் பலம் பெறத் தொடங்கின. சத்திரியர்கள் செல்வாக்கிழந்த நிலையில் சமூகத்தின் அடுத்த சக்தியான வைசியர்களை தமக்கு அணுக்கமான சாதியாக பார்க்கத் தொடங்கினர் பார்ப்பனர். வைசிய சாதிகள் சிலவற்றுக்குப் பூணூல் அணிந்துகொள்ள அனுமதிக்குமளவுக்கு இந்த நெருக்கம் வளர்ந்தது. சமூகத்தின் மேல்நிலையிலுள்ள பார்ப்பன சாதி தம்மை அங்கீகரித்ததற்கு பிரதியுபகாரமாக அவர்களுக்கு விசுவாசம் கொண்ட புதிய தொண்டர்களாக மாறிய வைசிய சாதியினர் தமக்கு அடுத்தநிலையிலிருந்த சூத்திரர்களை ஒடுக்குவதில் விருப்பம் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களும் சத்திரிய சாதியினரும் நடத்தும் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் இந்த பனியாக்கள் சிலர் சேர்ந்திருப்பதற்கான பின்னணி இதுதான்.

வேத மந்திரங்களை மனனம் செய்வதில் நூற்றாண்டு கால பயிற்சி பெற்றிருந்த பார்ப்பனர்கள் வெள்ளையராட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மனப்பாட கல்விக்குள் தங்களை எளிதாக பொருத்திக் கொண்டனர். (மனப்பாடம் செய்து மார்க் பெறுவதையே தகுதியாகவும் திறமையாகவும் இவர்கள் போற்றுவதற்கான வரலாற்றுக் காரணம் இதுதான்.) மாட்டிறைச்சி உண்பதால் இங்கே சிலசாதியினரை தீண்டத்தகாதவர்களென ஒதுக்கிவைத்த பார்ப்பனர்கள் அதே மாட்டிறைச்சியை மூவேளையும் தின்கிற வெள்ளையர்களுக்கு விசுவாசமான ஊழியர்களாகத் துடித்தனர். மன்னர்களுக்கு ராஜகுருக்களாயிருந்து மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான வழிமுறைகளை சொல்வதில் நீண்ட அனுபவம் பெற்றிருந்த பார்ப்பனர்கள் வெள்ளையருக்கும் கூட தேவைப்பட்டனர். இரண்டு ஒடுக்குமுறையாளர்கள் இணைவது ஒரு இயல்பான கூட்டணிதானே?

தவிர்க்கவியலாமல் கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்டது. கல்விக்கூடங்கள் பொதுவாக்கப்பட்டன. அவற்றில் யாரும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட, சூத்திர சாதியார் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட கோவிலிலோ ஆதிக்கசாதியினரின் தெருக்களிலோ கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. எனவே கல்விக்கூடத்திற்குள் நுழையும் உரிமை, ஆதிக்கசாதி தெருவில் நுழையக்கூடாதென்கிற சாதித்தடையின் மூலமாக மறுக்கப்பட்டது. இன்றைக்கும் கிராமப்புறங்களில் ஆதிக்கசாதியினர் தெருக்களில் அமைந்துள்ள கல்விக்கூடங்களுக்கு வந்துபோவது ஒரு தலித் மாணவனுக்கு அச்சுறுத்தலான காரியம்தான். மீறி வருகிறவர்கள் சைக்கிளில் வரக்கூடாது, செருப்பணியக் கூடாது என்பது போன்ற தடைகள் இதன் நீட்சியாகவே நீடிக்கின்றன. இப்போதும் பெண்களுக்கு வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்ததால் வீட்டைவிட்டு வெளியேறி கல்விக்கூடங்களுக்கு செல்லும் வாய்ப்பு தடைபட்டது. ஆகவே பிரிட்டிஷ் ஆட்சியிலும் சாதிய பாலின ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டப்படவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த நிலை நீடிப்பதற்கும் வலுவடைவதற்கும் இந்திய உயர்சாதியினருக்கு பிரிட்டிஷ் ஆட்சி உதவிகரமாய் இருந்தது.

பிரிட்டிஷாரின் மருத்துவக் கல்வியை படிப்பதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற முன்னிபந்தனை வைக்கப்பட்டிருந்ததை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். உண்மையில் சமஸ்கிருதம் பார்ப்பன ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த மொழி. அதை ஒரு முன்னிபந்தனையாக பிரிட்டிஷார் மாற்றியதன் மூலம் பிறசாதியாரும் பார்ப்பன பெண்களும்கூட மருத்துவப் படிப்புக்கு செல்லமுடியாத ஒரு தடையை நுட்பமாக ஏற்படுத்தினர். இப்படி போட்டியாளர்களை வெளியே நிறுத்திவிட்டு பாதுகாப்பாய் பதுங்கிப் பெற்ற அறிவைத்தான் இன்று தங்களது பரம்பரை அறிவாக பார்ப்பனர்கள் பீற்றுகின்றனர்.

இந்திய மக்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை பிரிட்டிஷார் உருவாக்கியபோது அதில் முதலில் இணைந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான். பிறகு மற்ற சாதியினரும் வந்து சேர்ந்த நிலையில் அவர்கள், தாழ்த்தப்பட்டவர்களோடு ஒரே முகாமுக்குள் தங்கமுடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். ஊருக்குள் நிலவும் ஒதுக்குதலை ராணுவத்திற்குள்ளும் கொண்டுவரத் துடித்த ஆதிக்கசாதியினரின் விருப்பத்திற்குப் பணிந்து தாழ்த்தப்பட்டோரை ராணுவத்தில் சேர்க்க தடை விதித்தது அரசு. இதையெல்லாம் கண்டு வெகுண்ட அம்பேத்கர், ‘புதுத்துணியைக் கொடுத்து இதேமாதிரி ஒரு சட்டை தைத்துத் தா என்றவனுக்கு, புதுச்சட்டை தைத்து அதையும் பழைய சட்டை மாதிரியே கிழித்துக் கொடுத்த சீனா டைலர் கதையைப் போல’ ஏற்கனவே இருக்கும் கிழிசலை பிரிட்டிஷ் அரசும் அப்படியே பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். அதாவது சமூகத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளில் கடந்த காலத்தைப் போலவே இப்போதும் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் நீடிப்பதாக குற்றம் சாட்டினார். அம்பேத்கரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மேலும் சில விவரங்களை வரலாறு நமக்குத் தருகிறது.

1770ல் நியமிக்கப்பட்ட பதினைந்து இந்திய ஐசிஎஸ் அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்தனர். 1840ல் இந்திய நிர்வாகத்துறையை ஆய்வு செய்த பிரிட்டீஷ் அதிகாரி ஒருவர், ஒரு நாட்டின் நிர்வாகத்துறை முழுவதும் ஒரு சாதியின் கட்டுப்பாட்டில் இருப்பது ஆபத்தானது என்று அரசாங்கத்தை எச்சரித்தார். ஆனாலும் நிலைமையில் மாற்றமேதுமில்லை. 1885ல் காங்கிரஸ் உருவானபோது இந்தியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற கோரிக்கையும்கூட பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. படித்த இந்தியர்கள் அனைவருமே பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில் இது இயல்பானதுதான். இந்தியர் என்ற போர்வைக்குள் பதுங்கி பார்ப்பனர்கள் ஆதாயமடைவதைத் தடுக்கும் வழியேதும் இல்லை.

தடைகளை மீறி படித்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் நிர்வாகத்திலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை 1870 தொடங்கி பூலேவும் அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் எழுப்பி பார்ப்பன ஏகபோகத்திற்கு முடிவுகட்டும் முதல் மணியை ஒலிக்கச் செய்தனர். பார்ப்பனரல்லாதவர்களுக்கு பங்கு வேண்டுமென்ற கோரிக்கை நாடெங்கும் கிளம்பியது. 1902ல் கோல்காபூர் சமஸ்தானத்தில் நிர்வாகப் பதவிகள் அனைத்திலும் ஐம்பது சதவிகிதத்தை பார்ப்பனரல்லாதவர்களுக்கு ஒதுக்கி மன்னர் சாகுமகராஜ் உத்தரவிட்டார். இதுதான் பார்ப்பனர்களிடமிருந்த 100 சதவீத இடத்தை மறுபங்கீடு செய்து மற்றவர்களுக்கு வழங்கிய முதல் உத்தரவு. அன்று தொடங்கி படிப்படியாக நாட்டின் பல பாகங்களிலும் சாதி பலத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கும் ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது. இதற்கு 1927ல் சென்னை மாகாணத்தில் நடைமுறைக்கு வந்த கம்யூனல் G.O. ஒரு முன்னோடியாக அமைந்தது. 1932ல் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே ஏற்பட்ட பூனா ஒப்பந்த அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகாரப் பகிர்வுகள் கிடைத்தன. 1950ல் இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கம்யூனல் G.O. அரசியல் சட்டத்திற்கு முரணாக இருப்பதாகக் கூறி ஒரு பார்ப்பனர் தொடுத்த வழக்கினடிப்படையில் அவ்வுத்தரவை செல்லாததென்று அறிவித்தன சென்னை உயர்நீதி மன்றமும் பின் உச்சநீதி மன்றமும். பெரியாரின் போராட்டத்திற்குப் பிறகு அரசியல் சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டு தமிழகத்தின் வகுப்புவாரி உத்தரவு காப்பாற்றப்பட்டது. 1953ல் காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்பட்டோர் கமிஷனின் பரிந்துரைகள் அரசால் ஏற்கப்படவில்லை. 1979ல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்பட்டோர் கமிஷன் ஓராண்டுகாலம் ஆய்வுசெய்து 11 காரணிகளின் அடிப்படையில் சமூகப் பொருளாதார, கல்வி அடிப்படையில் பிற்பட்டவர்களாக 3743 சாதிகளை அடையாளம் கண்டது. மக்கள் தொகையில் 52 சதவீதம் உள்ள இவர்களுக்கு கல்வி, வேலை ஆகியவற்றில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக 1963 ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மக்கள் தொகையில் 52 சதவீதம் பேராக உள்ள பிற்பட்டோருக்கு 27 சதம் என்று பரிந்துரைக்க வேண்டியதாயிற்று.

பத்தாண்டுகளுக்குப் பிறகு இடதுசாரி, வலதுசாரிகளின் ஆதரவில் அமைந்த தேசிய முன்னணி அரசு 1990ல் மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக வேலை வாய்ப்புகளில் 27 சதவீதம் பிற்பட்டோருக்கானதென்று அறிவித்தது. உயர்சாதியினர் ரகளை செய்தனர். ரதயாத்திரை நடத்தினர். ராஜீவ் கோஸ்வாமியை எரித்தனர். அரசையே கவிழ்த்தனர். அத்வானியும் ராஜீவ்காந்தியும் ஒருகுரலில் எதிர்த்தார்கள். அப்போது ‘கல்வியில் வேண்டுமானால் இடஒதுக்கீடு கொடுத்து தகுதியூட்டம் செய்யுங்கள், வேலைவாய்ப்பில் ஏற்கமாட்டோம்’ என்று எதிர்த்தனர். ஆகவே இப்போது உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை நியாயவுணர்ச்சியோடு அவர்கள் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு பண்பு அவர்களிடம் வெளிப்பட்டதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை. இப்போது உயர்கல்வியில் ஒதுக்கீடு கூடாது, ஆரம்பக்கல்வியில் வேண்டுமானால் சிறப்பு கவனம் செலுத்துங்கள் என்று எதிர்க்கின்றனர். நாளை ஆரம்பக் கல்வியில் தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் பிற்பட்டோருக்கும் சிறப்பு கவனம் செலுத்தும் திட்டம் ஏதேனும் அறிவிக்கப்படுமானால் அதை எதிர்க்க, பிறப்பதற்கு முன்பே வயிற்றிலிருக்கும்போதே ஏதாவது செய்யுங்கள் என்பது மாதிரியான வாதங்களைக்கூட அவர்கள் இப்போதே யோசித்திருக்கக்கூடும்.

இப்படி தங்களிடமிருக்கும் மொத்த இடங்களில் ஒரு பகுதியை பறித்தெடுத்து மற்றவர்களுக்குப் பங்கீட்டுக் கொடுக்கும் ஏற்பாடுகள் வரும்போதெல்லாம் எதிர்ப்பதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் எவையும் புதியவை அல்ல. கோயிலுக்குள் நுழையவும் குளத்தில் மூழ்கவும் கல்வி கற்கவும் சொத்து வைத்துக் கொள்ளவும் என்னென்ன காரணங்களை காட்டி மறுத்தார்களோ அதையேதான் இப்போதும் சொல்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் காரணமாக இந்திய சமூகம் சாதி ரீதியாக பிளவுண்டு போகுமென்று சமத்துவத்திற்கான இளைஞர் குழு தேசபக்த முழக்கமிடுகின்றது. ஆதிதிராவிடரும் அருந்ததியரும் அக்ரஹாரத்துக்குள் குடியேறி அர்ச்சகராகி விட்டதைப் போலவும், பார்ப்பனர்கள் அனைவரும் பறைச்சேரியில் மேளமடித்துக் கொண்டும் பொதுக் கழிப்பறையில் மலமள்ளிக் கொண்டும் இருக்குமளவுக்குச் சாதிப்பிரிவினைகள் மறைந்துவிட்டதைப் போலவும் கதையளக்கின்றனர். ஏற்கனவே சாதிரீதியாகப் பிரிக்கப்பட்டு சமத்துவமின்மையின் மீது சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளதால்தான் இப்போது இடஒதுக்கீடு தேவைப்படுகிறது என்கிற அடிப்படையான உண்மையை ஒத்துக்கொள்ள மனமின்றி நிலையை தலைகீழாக விவரிக்கின்றனர்.

இப்போது இந்திய சமூகத்தில் சாதி ஒரு பிரச்சினையே இல்லை என்பதைப்போல பாவனை காட்டுகின்றனர். ஆனால் ஒரு செத்த மாட்டிற்காக ஐந்து தலித்துகளை கொல்வதும், கோயில் கருவறைக்குள் பிறசாதியாரை நுழையவிடாமல் தடுப்பதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பதும், சமஸ்கிருதம் தவிர வேறொரு மொழியில் அர்ச்சனைகள் ஓதப்படாமல் இருப்பதற்கும் சாதிதானே காரணம்? ஆசி வாங்க வந்த தலித்கள் தொட்டுவிட்டால் தீட்டாகிவிடும் என்று தன் கால்களை பட்டுத்துணியால் காஞ்சி சங்கரன் மறைத்துக் கொண்டதற்கும், சங்கரமடத்தின் கல்லூரி விடுதிகளில் சாதியடிப்படையில் உணவுக்கூடம் பிரிக்கப்பட்டிருப்பதற்கும் சாதியல்லாமல் வேறென்ன காரணத்தை சொல்ல முடியும்? ஒரு வேலையைச் செய்வதற்கு தெரிந்திருப்பது ஒன்றே அதற்கு தேவையான தகுதியும் திறமையும். அப்படியானால் மணி ஆட்டத் தெரிந்த அனைவரையும் கோவிலில் அர்ச்சகராக்க வேண்டியதுதானே? ஆகவே தகுதி திறமை என்பதல்ல இவர்களது பிரச்சினை. மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது என்கிற சாதிவெறியே தடுக்கிறது.

தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் தேவையான உடல் மன ஆரோக்யம்தானே ஒரு திருமணத்திற்கு தேவையான தகுதியும் திறமையும்... பிறகெதற்கு இன்ன சாதியில் இன்ன கோத்திரத்தில் மணமகன்/ள் வேண்டும் என்று இங்கிலிஷ் பேப்பரிலும் இன்டர்நெட்டிலும் விளம்பரம் வருகிறது? ரத்தக்கலப்பு நடக்காமல் சாதியம் ஒழியாது என்று அம்பேத்கர் சொன்னதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திய பார்ப்பனர்கள் எத்தனை பேர்? சொந்த வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் சாதியைக் கைவிடாமலே சாதி ஒழிந்து விட்டதைப் போன்று பிதற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? அம்பேத்கர் சொன்னதைப்போல ஒவ்வொரு தனிமனிதனையும் பிறப்பிலிருந்து இறப்புவரை சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்துமத கோட்பாடுகள்தானே வழிநடத்தும் நெறியாக இருக்கிறது? ஒவ்வொரு கிராமமும் நகரமும் ஊர் என்றும் சேரி என்றும் கிழிந்து கிடக்கிற யதார்த்தத்தை மறைத்து சாதியே இல்லை என்று ஓலமிடுவது மிகப்பெரும் மோசடி. இன்றுவரையிலும் சுடுகாட்டில்கூட சமத்துவத்தை கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே, இடஒதுக்கீட்டால் சமூகம் பிளவுறவில்லை, சமூகம் பிளவுண்டிருப்பதால்தான் இடஒதுக்கீடு என்பதே சரியானது.

உயர் கல்வியில் இடஒதுக்கீடு அமலானால் தகுதியும் திறமையும் வேலைத்திறமும் குறைந்துவிடும் என்பதும் இவர்களது முக்கியமான குற்றச்சாட்டு. இதன் பொருள் பரம்பரை பரம்பரையாக உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிற்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மூளையுழைப்பு சார்ந்த ஒரு மருத்துவராகவோ, பொறிஞராகவோ, மேலாண்மை வல்லுனராகவோ இருக்கும் தகுதி கிடையாது என்பதே. உடலுழைப்பு என்பதே மிகுந்த அறிவுப்பூர்வமான செயல்பாடுதான். குறிப்பிட்ட கருவியைப் பயன்படுத்தி குறைந்த சக்தியை செலவிட்டு கூடுதல் பலனை பெறுவதற்குத் தேவையான முழு அறிவோடும்தான் ஒரு உழைப்புச் செயல்பாடு நிகழ்கிறது. உடலுழைப்பை அறிவிலிருந்து துண்டித்துப் பார்ப்பது அறிவீனம். அல்லது உழைப்பில் ஈடுபடாததால் உணர்ந்து கொள்ள முடியாத அனுபவக் குறைவாகவும் இருக்கக்கூடும். எனவே உழைக்கும் சாதியினர் வீட்டுப் பிள்ளைகளை அறிவற்றவர்களாக சித்தரிப்பதில் உண்மையேதுமில்லை.

பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதி பெறுகிற மதிப்பெண்ணைத்தான் இவர்கள் தகுதி திறமை என்கின்றனர். இன்றைக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, +1 பாடங்கள் நடத்தப்படுவதேயில்லை. ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடமும் +1 வகுப்பிலேயே +2 பாடமும் நடத்தப்படுகிறது. ஓராண்டில் படித்து முடித்து பரிட்சையைச் சந்திக்க திராணியற்ற இம்மாணவர்கள் ஒரே பாடத்தை இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்கின்றனர். இவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தகுதியும் திறமையும் மிக்கவர்களாக கொண்டாடப்படுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் இருக்கும் அரைகுறை வாய்ப்புகளை பயன்படுத்தி அந்த வகுப்புக்கான பாடத்தை அந்த ஒரு வருடத்தில் மட்டுமே படித்து பரிட்சை எழுதுகிற மாணவன் அறுபதோ எழுபதோ மதிப்பெண்கள் பெற்று தகுதி குறைந்தவனாக புறந்தள்ளப்படுகிறான்.

இப்போது நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, ஒரேபாடத்தை இரண்டு வருடம் படித்தவன் திறமைசாலியா அல்லது ஒரே வருடத்தில் படித்தவனா? இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் பார்வையில் என்ன தகிடுதத்தம் செய்தேனும் அதிக மதிப்பெண் எடுத்தவன்தான் திறமைசாலி, அவன்தான் மருத்துவராகவோ பொறியாளராகவோ விஞ்ஞானியாகவோ வருவதற்கு தகுதியானவன். இப்படி இட்டுக்கட்டிய தகுதியும் திறமையும் நமக்குத் தேவையில்லை. அந்த அரசாங்கப் பள்ளி மாணவனின் திறமைதான் இந்த நாட்டின் உண்மையான சராசரித் திறமை. இந்த நாட்டு மக்களின் சராசரி அறிவுக்கும் திறமைக்கும் மீறிய தகுதியோ திறமையோ ஒருவனுக்கு இருக்குமானால் அது இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடியதாக இருக்கமுடியாது என்பதற்கு இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கக்கூடியவர்களே உதாரணம். அவர்கள் இந்த நாட்டுக்கு பெரும்பாலும் பயன்படுவதில்லை. டாலர் பிச்சைகளாக ஓடிவிடுகின்றனர். (இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படித்து முடிக்கிறவர்கள் பத்தாண்டு காலம் வெளிநாடு செல்லக்கூடாது, உள்நாட்டிலேயே பணியாற்ற வேண்டும் என்று சட்டம் வருமானால் தேசம் பற்றி பேசும் இவர்களின் வாய் எந்தத் திசையில் கோணிக்கொள்ளும் என்பது அப்போது தெரியும்)

நகர்ப்புற/ வசதியான மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் கிராமப்புறத்திலிருந்து வருகிற பிற்பட்ட/தாழ்த்தப்பட்ட/பழங்குடி மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியை குறைப்பதற்கான ஏற்பாடுதான் இடஒதுக்கீடு. இந்த இடைவெளி ஒருவரது சாதி, சாதிக்கேற்ற பொருளாதார மற்றும் கல்வி பின்புலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இடஒதுக்கீட்டை வெறும் பொருளாதாரப் பிரச்னையாகவோ அல்லது வெறும் சாதிப் பிரச்னையாகவோ மட்டும் குறுக்கிப் பார்க்கக்கூடாது. சாதி அடிப்படைக்குப் பதிலாக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வந்தால் ஏற்றுக் கொள்வதாக குறுக்குசால் ஓட்டுகிறவர்களும் உண்டு. ஓரிரு மதிப்பெண் குறைவாகப் பெற்றவர் சாதி அடிப்படையில் உள்ளே வந்தால் தகுதி குறைந்துவிடும் என்றும் அவரே பொருளாதார அடிப்படையில் வந்தால் தகுதி குறையாது என்றும் விந்தையான வாதத்தை முன்வைக்கின்றனர். சாதி அடிப்படை ஒதுக்கீட்டை எதிர்க்கும் இவர்கள், என்.ஆர்.ஐ கோட்டாவையோ தனியார் கல்லூரிகளில் நடக்கும் ஏலத்தில் படித்து வந்தவர்களையோ பற்றி வாய் திறப்பதில்லை. கோட்டா முறையே கூடாது என்று கொக்கரிக்கும் ஏஐஐஎம்எஸ்-சில் இளநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை படிப்பில் 25 சதமாக இருக்கும் கோட்டா குறித்தும் மௌனம் காக்கின்றனர்.

இடஒதுக்கீட்டின் மூலம் வருகிறவர்களால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று தம் பங்குக்கு இந்திய முதலாளிகளும் குதிக்கின்றனர். தாராளமயத்தின் விளைவால் இந்திய சந்தைக்குள் நுழையும் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களுக்கு அனுசரனையான ஆடுகளம் (Level playing field) வேண்டும் என்று கோரினர் இந்திய பெருமுதலாளிகள். அதாவது உலகம் முழுவதும் சுரண்டி கொழுத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டியிட்டு வெற்றிபெற (கொள்ளையடிக்க) முடியாத நிலையில் இருக்கும் இந்திய தொழில்துறையைக் காப்பாற்ற ஒரு இடஒதுக்கீடு தேவை என்பதே இதன் உட்பொருள். முன்னூறாண்டு காலம் காலனிய ஆட்சியின்கீழ் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் ஆளுமைகளை முழுமையாக வளர்த்துக் கொள்ளும் முன்பே தன்னை ஒடுக்கியவர்களோடு போட்டியிட வேண்டும் என்பது நெறியற்ற போட்டியாகும். எனவே இவர்களைப் பாதுகாக்க சில சிறப்பு ஏற்பாடுகளும் வலுத்தவர்கள் மீது சில கட்டுப்பாடுகளும் தேவைப்பட்டன. உள்நாட்டுத் தொழில்பாதுகாப்பு என்கிற கண்ணோட்டத்தில் இந்திய முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை, கடனுதவிகள், மானியங்கள் அனைத்தும் ஒருவகையான இடஒதுக்கீடுதான்.

‘எங்களுக்குத் தகுதியும் திறமையும் இருக்கிறது. போட்டியில் வென்றால் களத்தில் இருப்போம், தோற்றால் வெளியேறி விடுகிறோம்’ என்று வெத்துச்சவடால் விடவில்லை இந்திய முதலாளிகள். சமமான வாய்ப்புள்ளவர்களுக்கிடையே தான் போட்டி நடைபெறவேண்டும், வலுத்தவனுக்கும் இளைத்தவனுக்கும் இடையே நடந்தால் தாம் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற நியாயமான அச்சத்தில் கோட்டா கேட்டனர். பெற்றனர். முதலாளிகளை தமது ஓட்டு வங்கியாக ஆக்கிக்கொள்வதற்காக இப்படியான ஒதுக்கீடுகள் செய்யப்படுவதாக ஒருவரும் பேசுவதில்லை. சலுகை கொடுத்தால் உற்பத்தியின் தரம் குறைந்துவிடும் என்று யாரும் ஓலமிடவில்லை. ஆனால் உயர்கல்வியில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டால், எல்லோரும் சமம், திறமையிருக்கிறவன் ஜெயிக்கட்டும் என்று இந்திய முதலாளிகள் புதுநீதி பேசுகின்றனர்.

சர்வதேசச் சந்தையில் போட்டியிட வேண்டிய நெருக்கடியை உலகமயமாக்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்போட்டியை எதிர்கொள்ளத் தேவையான தகுதியும் திறமையும் ஆற்றலும் இடஒதுக்கீட்டினால் பாதிக்கும் என்பதாலேயே எதிர்ப்பதாக முதலாளிகள் விளக்கமளிக்கின்றனர். அப்படியானால் இடஒதுக்கீடு என்பதே அமலாகாத இந்த தனியார் தொழில்துறையில் ஏன் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன? இந்த ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் தகுதியும் திறமையும் என்ன? முறையான கல்வியும் பயிற்சியும் பெற்ற நிரந்தர ஊழியர்களை சொற்பமாகவும், போதிய கல்வித் தகுதி பெறாத ஒப்பந்த ஊழியர்களை பெரும்பான்மையாகவும் வைத்துக்கொண்டுதானே உற்பத்தி செய்கின்றனர்? சர்வதேச தரச்சான்றிதழுடன் சந்தைக்குள் புழங்கும் பல நூற்பாலைகளில் எத்தனை பேர் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்கள்?

வறுமைக்காளான பகுதிகளிலிருந்து கொத்தடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களை ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரால் ஆலை வளாகத்திற்குள்ளேயே அடைத்துவைத்து வேலைவாங்குகிற அயோக்கியத்தனத்தில் என்ன தகுதியும் திறமையும் வழிகிறது? உதிரி பாகங்கள் முழுவதையும் அவுட்சோர்சிங் வழியாக பெறுகின்ற முதலாளிகள் அங்கே தகுதிக்கும் திறமைக்கும் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றனர்? சந்தையில் விற்கிற சர்வதேச தரச்சான்றிதழ்களை வாங்கி மாட்டி வைத்துக்கொண்டு அதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நியதிகளுக்கும் எதிராக இயங்கும் இந்திய முதலாளிகள் தகுதி திறமை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள்.

இடஒதுக்கீடு அமலாகும் அரசுத்துறைகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கே காலியிடத்தின் எண்ணிக்கை பூஜ்ஜியமே. அந்த பூஜ்ஜியத்தில் எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினாலும் என்ன பலன்? எனவேதான் சமூகத்தின் பொதுவளங்களை உறிஞ்சி வளரும் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது. ஒருவேளை இடஒதுக்கீடு இங்கு வருமானால், வேலைக்கு அமர்த்துவதும் துரத்துவதும் தனது முற்றுரிமையாக இருந்துவரும் நிலை நீடிக்காது என்று அஞ்சுகின்றனர் முதலாளிகள். முதலாளியின் தயவினால் அல்லாமல் அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு உரிமையின் அடிப்படையில் வேலையில் சேர்வதாய் நினைக்கின்ற ஒரு தொழிலாளி, தங்களது சட்டமீறல்களை சகித்துக்கொள்வானா... தமக்கு அடங்கி நடப்பானா என்பதே இந்த அச்சத்தின் உட்பொருள். தமது சுரண்டலுக்குத் தடையாய் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் அனேகமாக ஒழித்துக் கட்டிவிட்ட நிலையில் புதிதாக வரும் எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதும்கூட அவர்களது எதிர்ப்பிற்கு காரணமாய் உள்ளது. எனவே தான் உயர்கல்வியில் இடஒதுக்கீடு எதிர்ப்பு/ரகளைக்கு இந்திய முதலாளிகள் ஆதரவளிக்கின்றனர்.